Thursday, July 19, 2012

செங்கோட்டையனுக்கு "கல்தா': முதல்வர் முடிவின் பின்னணி என்ன?

சென்னை:முதல்வர் எச்சரிக்கைக்கு பிறகும், தனது முன்னாள் உதவியாளருக்கு சாதகமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது உள்ளிட்ட காரணங்களால், செங்கோட்டையனின் அமைச்சர் மற்றும் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாக அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அ.தி.மு.க.,வின், சீனியர் கட்சி நிர்வாகி என்று கருதப்படும், செங்கோட்டையனுக்கு, அ.தி.மு.க., அமைச்சரவை பொறுப்பேற்றதும், வேளாண்மைத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் தலைமை நிலையச் செயலர் என்ற முந்தைய பதவியும் தொடர்ந்ததால், அமைச்சரவையிலும், கட்சியிலும் அவர் முக்கியத்துவம் பெற்றார். இருப்பினும், அவருக்கு, செக் வைக்கும் வகையில், செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டை சேர்ந்த ராமலிங்கத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
முதல்வரிடம் புகார்
இந்நிலையில், செங்கோட்டையனிடம் நீண்ட காலமாகஉதவியாளராக இருந்த ஆறுமுகம் வடிவில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. நிழல் அமைச்சராக செயல்படுகிறார்; குடும்பத்தை விட்டு, செங்கோட்டையனை பிரித்து வைத்துள்ளார், என ஆறுமுகம் மீது, பல்வேறு புகார்கள் எழுந்தன. புகார்களுக்கு பிறகும், ஆறுமுகம் மீதான, பாசத்தை செங்கோட்டையன் விடவில்லை.
ஒரு கட்டத்தில், வெறுத்துப்போன செங்கோட்டையனின் மனைவி மற்றும் மகன் கதிர் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து, செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். இதில், உதவியாளர் ஆறுமுகத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன், பின்னணி குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலாகா மாற்றம்
இதையடுத்து, செங்கோட்டையனை நேரில் அழைத்து, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்தார். அவரிடம் இருந்த வேளாண்மைத் துறை பறிக்கப்பட்டு, ஜூனியர் அமைச்சர் வசமிருந்த தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது.செங்கோட்டையனின் உதவியாளர் பணியில் இருந்த ஆறுமுகம் நீக்கப்பட்டதோடு, அவர் மீது வழக்குகள் பாய்ந்தன. ஆறுமுகம் கைதானார். உதவியாளர் தொடர்பான விவகாரங்களில், பட்டும் படாமல் ஒதுங்கி இருந்ததால், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, செங்கோட்டையனுக்கு, வருவாய்துறை வழங்கப்பட்டது. அமைச்சரவையில் தனக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்ததையடுத்து, செங்கோட்டையனின் செயல்பாடுகள் மாறியதுதான் அவரது பதவி பறிப்புக்கு காரணம் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.
கொடநாட்டிலிருந்து திரும்பியதும்,நேற்று மாலை, செங்கோட்டையனை போயஸ் கார்டனுக்கு வரவழைத்த முதல்வர் ஜெயலலிதா, அவரின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் மீது வந்த புகார்கள் குறித்து, அப்போது விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.செங்கோட்டையைன் அளித்த விளக்கத்தில், திருப்தியடையாத ஜெயலலிதா, அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவரை நீக்கியுள்ளார் எனஅ.தி. மு.க.,வினர் கூறுகின்றனர்.
புகார்கள் என்ன?
இது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:உதவியாளர் ஆறுமுகத்துக்கு, எவ்விதத்திலு<ம் உதவக்கூடாது என்று முதல்வர் எச்சரித்த நிலையில், சில மாதங்கள் மட்டுமே, அதை மதித்து நடந்துள்ளார். அதன்பின், உதவியாளர் வழக்கில் தலையிட்டு, காவல்துறைக்கு, சில உத்தரவுகளை, செங்கோட்டையன் பிறப்பித்ததாக, முதல்வருக்கு புகார் போனது. தனது எச்சரிக்கைக்கு பிறகும், உதவியாளர் ஆறுமுகம் விவகாரத்தில், செங்கோட்டையன் தலையிட்டது, முதல்வருக்கு, கோபத்தை ஏற்படுத்தி, பதவி பறிப்புக்கு வித்திட்டுள் ளது.மேலும், ஜூனியர் அமைச்சர்களிடம், செங்கோட்டையன் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், முதல்வருக்கு புகார்கள் சென்றுள்ளன. கட்சியில் கோஷ்டி சேர்க்கும் வகையில், தனது ஆதரவு அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செங்கோட்டையன் செயல்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையில், சமீபகாலத்தில் வழங்கப்பட்ட சில உத்தரவுகள் குறித்தும், முதல்வரின் கவனத்துக்கு, அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.ஆறு முறை எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க.,வின் உயர்மட்ட தலைவர்களுள் ஒருவராக விளங்கிய செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர். 1977 தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் பின் ஐந்து முறை எம்.எல்.ஏ., வாக தேர்வு பெற்ற செங்கோட்டையன், 1991 - 96ல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2011ல் வேளாண் துறை அமைச்சரானார். பின் தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த்துறை அமைச்சரானார்.

No comments:

Post a Comment