Monday, July 23, 2012

காண்க மேலும் அறிக close ஒரு தோசை விலை ரூ.1.50 தானுங்கோ... ஏ.பி.நாடானூரில் முதியவர் விற்பனை

ஆழ்வார்குறிச்சி:ஏ.பி.நாடானூரில் முதியவர் ரூ.1.50க்கு தோசை விற்று
வருகிறார்.நெல்லை மாவட்டம் கடையம் யூனியனில் பாப்பான்குளம் அருகே
ஏ.பி.நாடானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக வள்ளியம்மாள்புரம்
செல்லும் சாலை உள்ளது. இந்த மெயின்ரோட்டில் 80 வயது முதியவர் ஒருவர்
குறைந்த விலையில் தோசை விற்பனை செய்து வருகிறார்.

ஏ.பி.நாடானூர்
மெயின்ரோட்டில் பால்துரை (80) என்பவர் காலை 5 மணிக்கு தனது கடையில் தோசை
தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார். கடந்த 30 நாட்கள் வரை 1 ரூபாய்க்கு தோசை
விற்பனை செய்துள்ளார்.வாடிக்கையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக தற்போது
ஒரு தோசை ரூ.1.50க்கு விற்பனை செய்து வருகிறார். சுமார் காலை 5 மணியில்
இருந்து இரவு 9.30 மணி வரை விற்பனை நடக்கிறது. ஏராளமான வாடிக்கையாளர்கள்
தினமும் காலையில் குவிகின்றனர்.

ஒரு டீ கூட 6 ரூபாய்க்கு விற்பனை செய்யும்
நிலையில் நீங்கள் தோசையை ரூ.1.50க்கு விற்பனை செய்கிறீர்களே என்று
கேட்டபோது அவர் கூறியதாவது:எனக்கு தற்போது 80 வயது ஆகிறது. எனக்கு மூன்று பெண் குழந்தைகளும், 2 ஆண்
குழந்தைகளும் உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளாக நான் தோசைக்கடை வைத்துள்ளேன்.
கடந்த 30 நாட்களுக்கு முன்பு வரை ஒரு ரூபாய்க்கு தான் தோசை விற்பனை
செய்தேன். முதுமையின் காரணமாகவும், விலைவாசி ஏற்றத்தாலும், எனது
வாடிக்கையாளர்களின் வற்புறுத்தலாலும் ரூ.1.50க்கு விலை ஏற்றியுள்ளேன்.
மூன்று தோசை சாப்பிட்டாலே போதுமானதாகும். ரூ.4.50ல் காலை டிபனை முடித்து
விடுகின்றனர்.எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில்
சாம்பார், சட்னி, மிளகுபொடி வைத்து தோசை சப்ளை செய்கிறேன். எனது மனைவி
கோகிலா (70) எனக்கு கடையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நான் தெம்பாக
இருக்கும் வரை உழைப்பேன். எனது குழந்தைகளிடம் இதுவரை நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை. எனது மூன்று மகள்களையும் இந்த தோசைக்கடையின் மூலம்
வந்த வருமானத்தின் மூலமாகவே திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். ஆனால்
எனக்கு தமிழக அரசிடம் இருந்து முதியவருக்கு கிடைக்கும் பென்ஷன்
கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம் என்று வேதனையுடன்
கூறினார்.

காலை நேரத்தில் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில்
வரும் வியாபாரிகள் இவரது கடையில் அமர்ந்து தோசை சாப்பிடுவது வழக்கமாக
உள்ளது. 10 ரூபாய் இருந்தால் போதும் மதியத்திற்கு பார்சலும் வாங்கி
செல்லும் சைக்கிள் வியாபாரிகளும் உள்ளனர். மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளாக
ரூ.10க்குசாப்பாடு அளித்துள்ளார்.மேலும் இலையில் மட்டுமே பார்சல்
கட்டிக் கொடுக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார். பாலிதீன் பைகளை
பயன்படுத்தமாட்டேன் என்று கூறுகிறார்.

No comments:

Post a Comment