கட்சிக்குள்ளாறவே உருட்டுக்கட்டை தான் பேசுது!
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த
தின விழா, சத்தியமூர்த்தி பவனில், சமீபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில்,
மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பேசினார்... காமராஜரின் ஒவ்வொரு பிறந்தநாளின்
போதும், அவர் காலத்தைப் போல, ஆட்சி அமைய வேண்டும் எனப் பேசி விட்டு,
கலைந்து விடுகிறோம். அது பேச்சாக மட்டும் இருக்காமல், அவரது ஆட்சி அமைய,
உறுதி ஏற்க வேண்டும். கன்னியாகுமரியில் நம்ம கட்சி தொண்டருக்கு ஒரு பிரச்னை
ஏற்பட்டால், அவருக்கு ஆதரவாக, சென்னை வரை, காங்கிரசார் போராட்டம் நடத்த
வேண்டும் என்றார். அப்போது, குறும்புக்கார தொண்டர் ஒருவர், சத்தியமூர்த்தி
பவனுக்குள்ளேயே, ஒரு காங்கிரஸ்காரரை, இன்னொரு காங்கிரஸ்காரர்,
உருட்டுக்கட்டையால அடிக்கிறாரு... அதையே நம்மால கட்டுப் படுத்தவோ, தட்டிக்
கேக்கவோ முடியல... அப்பறம் எப்படி மாற்றுக் கட்சிக்காரங்க அடிக்கிறதை,
தட்டிக் கேட்க முடியும்... எனக் கேட்க, காதில் விழாதது போல், ஞானதேசிகன்
வேறு பேச்சுக்கு மாறினார்!வார்த்தை மாறாத அமைச்சர்!
சென்னை மருத்துவக் கல்லூரியில், சமீபத்தில் நடந்த மாணவர்கள் பேரமைப்பு துவக்க விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கலந்து கொண்டார். அவர் பேசிய போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைக்கு ஈடாக, தரம் உயர்த்தப்படும். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவில், முதல் தர வரிசையில் உள்ள மாணவர்கள் அனைவரும், சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், 165 ஆக உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, அடுத்த கல்வி ஆண்டு முதல், 250 ஆக உயர்த்தப்படும் என்றார். இதைக் கேட்ட மாணவர்கள், முதல் தர வரிசை மாணவர்கள், இந்தக் கல்லூரியைத் தான் தேர்ந்தெடுப்பர்... இதில் என்ன ஆச்சரியம் இருக்கு... போன வருஷமும் அமைச்சர், இதே மாதிரி, எண்ணிக்கையைக் கூட்டப் போறோம்ன்னு சொன்னாரு... ஆனா, அதுக்கான நடவடிக்கை ஒண்ணத்தையும் காணோம்... வருஷா வருஷம், வார்த்தை மாறாம பேசுறாரு பா... என, கமென்ட் அடித்தனர். சில மாணவர்கள், அமைச்சர் பேச்சுக்கு எதிர்குரல் கொடுக்கவே, செய்வதறியாத அமைச்சர், பேச்சைச் சுருக்கி, சீட்டில் அமர்ந்து விட்டார்!
No comments:
Post a Comment