மறுபடி உங்களைக் கூப்பிடுவேன்! முதல்வர் எடுத்த,
டிரில்லுல எம்.எல்.ஏ.,க்கள், அரண்டு போயிட்டாவ வே... என, விவாதத்தை சுடச்
சுடத் துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.
விவரமா சொல்லு பா... என்றார் அன்வர்பாய்.ஜனாதிபதி தேர்தல்ல, எப்படி ஓட்டு போடணும்னு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, செயல்முறை விளக்கம் நடந்துது இல்லியா... அது முடிஞ்சதும், கூட்டம் கலைஞ்சுடும்ன்னு எதிர்பார்த்தாவ... ஆனா முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் மேலே புகார் படிக்க ஆரம்பிச்சாங்க... தப்புத் தண்டா பண்ணினவங்க யாருன்னு சொல்லாமலேயே, பொத்தாம் பொதுவா கண்டிச்சாங்க...
ஒரு கட்டத்துல, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்னு ஆவேசமா பேசினாங்க... எம்.எல்.ஏ.,க்கள் யாரும், அம்மா மொகத்துல இப்படியொரு கோபத்தை பார்த்தது இல்லே... அரண்டு போய்ட்டாவ... யாரு யாரு, என்னென்ன தப்பு செஞ்சிருக்கீங்கன்னு விளக்க, மறுபடி உங்களைக் கூப்ட்டு பேசுவேன்னு எச்சரிக்கை விட்டுட்டு, கிளம்பிப் போய்ட்டாங்க... என, மூச்சிரைக்கக் கூறி முடித்தார் அண்ணாச்சி.
ஈரோடு அமைச்சரு, குஷில இருக்காரு பா... என, அடுத்த தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.
இங்கே பாரும்... மழை பெய்யறது... நல்ல காரமான தகவலைச் சொல்லும்... சொதப்பக் கூடாது... என, கண்டிஷன் போட்டார் குப்பண்ணா.
ஈரோடுலேர்ந்து ராமலிங்கம், பொதுப்பணித் துறை அமைச்சரா இருக்காரு... அவருக்கும், இப்ப, ஆட்சி - கட்சிப் பதவியை இழந்த செங்கோட்டையனுக்கும், ஏழாம் பொருத்தம்... அவரு, சில பல தகவல்களை, மேலிடத்துக்குச் சொன்னது தான், செங்கோட்டையனோட இந்த கதிக்குக் காரணம்ன்னு சொல்றாங்க... இன்னும் எத்தனை பேருக்கு, ஏழரை பிடிக்கப் போகுதோ தெரியலே...
முந்தா நாள் ராத்திரி, மாவட்ட செயலர் யாரும், அங்க இங்க அசையக் கூடாதுன்னு, முதல்வர் உத்தரவு போட்டிருந்தாங்க... அதுக்கும் என்ன காரணம்ன்னு தெரியலே... என அன்வர்பாய் கூற, கார மிளகாயைக் கடித்தவராய், குப்பண்ணாவுக்கு விக்கல் எடுத்தது.
டில்லில, காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு, தடபுடல் விருந்து கொடுத்தாங்க... நம்ம ஊரு தலைவருக்கு தான், கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிடிச்சுங்க... என, கடைசி மேட்டரைத் துவக்கினார் அந்தோணிசாமி. இத்தகவலைக் கேட்டதும், குப்பண்ணாவுக்கு விக்கல் நின்றது... எதுக்கு ஓய் விருந்து... எனக் கேட்டார்.
ஜனாதிபதி தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் முன்னணித் தலைவர்கள்ன்னு, 500 பேருக்கு டில்லி, அசோகா ஓட்டல்ல, கட்சி மேலிடத்து மேடம் விருந்து கொடுத்தாங்க... பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்ன்னு, வி.ஐ.பி., பட்டாளமே இருந்துச்சு... விருந்தினர்களை, மாநில வாரியா பிரிச்சு, சைவம் தனியாவும், ஊர்வன, பறப்பனன்னு தனியாவும் பரிமாறினாங்க... ஞானதேசிகனுக்கு, நெம்பர் 2 பிரச்னை... அதனால, வெறுந்தண்ணியக் குடிச்சு, டாய்லெட்டும், நடையுமா இருந்தாருங்க... என, அந்தோணிசாமி விளக்கிக் கொண்டிருந்த நேரத்தில், மிளகாய் காரமும், டீ குடித்த கலக்கமுமாய், வயிறைப் பிடித்தபடியே, வேகமாக வெளியேறினார் குப்பண்ணா. மற்றவர்கள், மசால் வடையை ருசித்துக் கிளம்பினர்!
No comments:
Post a Comment